Tuesday, December 11, 2007

கண்ணே பாரதி!

காலம் முன்னோக்கி ஒடுகிறது. நினைவுகள் மட்டும் பின்னோக்கி ஒடுகின்றன!பள்ளிப்பருவமாயிருக்கட்டும் அப்புறம் வளர்ந்த பருவங்களாயிருக்கட்டும் பாரதி என்ற மந்திரச்சொல் என்னை கவர்ந்து இழுக்கும் ஒரு காந்தச் சொல்லாகவே இருந்திருக்கிறது.எனக்கு அமைந்த பள்ளியும், ஆசிரியர்களும் காரணமா இல்லை எனது மனதை ஈர்க்குமொரு சகாப்தமாக பாரதியின் பாடல்கள் இருந்தது காரணமா என்று சொல்லமுடியாதபடி ஒரு நிலமை.அப்போவெல்லாம் பள்ளியில் பாரதி பிறந்த தினத்தன்று, பாரதியார் பாடல்களில் அதிக வரிகளை யார் ராகத்தோடு பாடுகிறார்களோ அவர்களுக்குத்தான் பாட்டுப் போட்டிகளில் முதற்பரிசு.பாரதியைப் பற்றி பேச்சுப்போட்டிகளில் பேசவேன்டும்.தலைப்புகள் பலவிதமயிருக்கும். பாரதியும் கண்ணனும்,பாரதியும் ஒறுமைப்பாடும்,பாரதியும் தமிழும், பாரதியும் நாட்டுப்பற்றும், பாரதியும் சுதந்திரமும், பாரதியும் பெண்ணும் என்றூ.போட்டிக்கு சில நிமிடங்களுக்கு முன்தான் தலைப்பு கொடுக்கப்படும். மிகவும் திகிலாயிருக்கும். பேச்சுப்போட்டி என்றாலே எல்லார் கவனமும் என் பக்கம். பாரதி பற்றிப் பேச கசக்குமா என்ன?பாரதியார் பாடலோடு நான் பேச்சுப்போட்டிக்கு பேச ஆரம்பித்தவுடனேயே என் ஆசிரியர்கள் மற்றும் எனது போட்டிகளில் சேராத கூடப்படிக்கும் மாணவிகளிடம் ஒரு கைதட்டலுடன் கிடைக்கும் ஊக்கம் கலந்த வாழ்த்துக்கள்.ஆஹா!எவ்வளவு இனிய மாலைப்பொழுதுகள் அவை!நிமிர்ந்து உட்கார்ந்து தலைமை ஆசிரியரைப் பார்க்கும் தமிழாசிரியரின் பார்வையில் இவள் என் மாணவி என்ற பெருமிதம் தொனிக்கும். நான் இன்னேரம் பாரதியாகவே மாறி”சிந்து நதியின் மிசை நிலவில் சேர நன்னாட்டிளம் பெண்களுடன்”போய்க்கொண்டிருப்பேன்.கூடவே என் பள்ளியினரையும் அழைத்துப்போகும் தன்மை அந்தப் பாட்டுக்கு இருக்கும். “தொன்று நிகழ்ந்ததனைத்துமுணர்ந்திடும் சூழ் கலைவாணர்களும் “பாரதத்தின் ஆரம்பம் தெரியாமல் தடுமாறுவார்கள்.கணிரென்ற குரலில் நான் பாடி பாரதி பற்றிப்பேசியதை அந்தப்பள்ளி ரசித்ததை இப்போதும் என் கண்கள் பனித்திட நினைவு கூறுகிறேன். “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்”அப்பப்பா!என்ன ஒரு தீர்க்க தரிசனம்!மெய் சிலிர்க்கிறது. கண்ணே பாரதி! நீ கண்ட கனவு நினைவாகி விட்டதடா!இனியொரு விதி செய்வோம் என்று நாங்கள் கிளம்பி விட்டோம். காணி நிலம் வேண்டும் என்று பராசக்தியுடன் மல்லுக்கு நின்றாயே! பலகாணி நிலங்களை பெற்று விட்டோம்! நீ மட்டும் இல்லையென்றால் உன் பாட்டு மட்டும் எங்களுக்குத் தெரியாமல் இருந்திருந்தால் , இவ்வளவு கஷ்டப்பட்டு கிடைத்தது இந்த சுதந்திரம் என்று என் போல சாதரணப்பெண்களுக்குத் தெரியாமலேயே போயிருக்கும்!முண்டாசு கட்டின முனிவனே உனக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.‌
தமிழ்த்தாய் வாழ்துடன் கூட்டம் முடியும்போது பரிசுகள் அறிவிப்பில் கடைசி பஷமாக எனக்கு நான்கு பரிசுகள் இருக்கும்.பரிசுகளைவிட பாரதியின் நினைவுகளைச் சுமப்பது பேரின்பமாக இருக்கும் எனக்கு!இந்த நினைவுகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதே மிகவும் பெருமையாக இருக்கிறது!வாழ்க பாரதி நாமாம்!வளர்க நம் தமிழ்!