Sunday, November 25, 2007

ராமாயணம் கண்ட ராமேஸ்வரம்

நானும் என் கணவரும் போன வருடம் ராமேஸ்வரம்,தனுஷ்கொடி மற்றும் பல இடங்களூக்குச் சென்று வந்தோம்.வெகு காலமாக நாங்கள் போக நினைத்திருந்த இடங்களில் ஒன்று இந்த ராமேஸ்வரமும்.விடியற்காலை ராமனாதபுரத்தை அடைந்தோம்.அங்கிருந்து ஒரு டாக்சி ஏற்பாடு செய்து கொண்டு தேவிப்பட்டினத்தை அடைந்தோம். அங்கு ஒரு வீட்டில் தங்கிகொண்டு குளித்து முடித்து சுத்தமாகப்போய்
நவபாஷாண நவகிரகத்தை பூசை செய்து விட்டு(இந்த நவகிரகத்தைதான் ராமர் பூசை செய்து வழிபட்டு தோஷங்கள் நீங்கப்பெற்றார் என்பது ஐதீகம்) . அங்கிருந்து திருப்புல்லணிக்குச்சென்றோம். திருப்புல்லாணியில் ராமர் படுத்திருந்த கோலத்திலிருந்தார்.அவர் சீதையைப்பிரிந்து மிக்க வருத்ததுடன் , சீதையை அடைவது எப்படி என சிந்திக்கும் திருக்கோலம் எங்களை மிகவும் சிந்திக்க வைத்தது ராமாயணத்தைப்ப்பற்றி.அங்கு படுத்த வண்ணம்தான் திட்டங்கள் தீட்டுகிறார் ராமர் என்று சொன்னார்கள். அனுமனும், சுக்ரீவனும் மற்ற துணைகளும் சூழ கோலம் கொன்டிருக்கும் ராமனைக்கன்டோம். அங்கிருந்து ராமேஸ்வரம் கிளம்பினோம். மாலை ராமேஸ்வரம் போய்ச் சேர்ந்து விட்டோம்.ராமேஸ்வரம் செல்லும் பாதையிலிருக்கும் பாலமும் அதன் அழகும் சொல்லி மாளாது. அந்த பாலத்தில் நாம் பயணிக்கும் போது சுற்றித்தெரியும் இடங்களெல்லாம் கடல் சூழ்ந்திருப்பது மிக அழகு.இயற்கையை ஏன் இவ்வளவு கவிஞர்கள் புகழ்ந்திருக்கிறார்கள் என்பது அந்த இடங்களைப் பார்க்கும்போது தெரிகிறது.
மறுநாள் காலை ராமேஸ்வரத்தில் நாங்கள் முன்னோர்களுக்குச் செய்ய வேன்டிய காரியங்களைச் செய்து விட்டு (இந்துக்கள் ராமேஸ்வரத்தில் முன்னொர்களுக்குச் செய்வது வழக்கம்)அன்று மாலை ராமேஸ்வரத்திலுள்ள ராமனாதர் கோவில் , கந்தர்வ‌ மலைக்கு(இந்த மலை மீது நின்றுதான் ஹனுமன் கடலைப்பர்த்ததாகவும்,அங்கிருந்துதான் தாவி இலங்கைக்குப் போனதாகவும். ராமாயணம் சொல்கிறது)சென்றோம் . அந்த மலை மீது நாங்கள் நின்று பார்த்துக்கொன்டிருந்த போது எங்கள் மகனிடமிருந்து(அவன் வெளிநாட்டில் இருக்கிறான்) மொபைலில் போன் வந்தது. அவன் சின்னக்குழந்தையைப்போல் அந்தமலை மேலிருந்து இலங்கை தெரிகிறதா என்று கேட்டான்.(சிறு வயதில் படித்த அமர்சித்ர கதாவின் தாக்கம்)அங்கிருந்து பார்த்தால் சிறுசிறு தீவுகள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தெரிகின்ற‌ன. ஒருவர் நன்கு நீந்தத்தெரிந்தவராக இருந்தால் விட்டுவிட்டு நீந்தி விடலாம் போலத்தான் தோன்றியது. ராமாயணம் படித்தவர்களுக்கு மயிர்கூச்செரியும் அனுபவங்ககள் தரும் இடம் இந்த ராமேஸ்வரம். மற்றும் சில இடங்களுக்குப் போய் விட்டு அன்று இரவு ஓய்வெடுத்து நன்றாகத்தூங்கினோம்.
மறு நாள் காலை ராமனாதர் கோவிலுக்குச் சென்று மரகத லிங்கத்தை தரிசனம் செய்து விட்டு(காலை 4மணி முதல் 5 மணி வரைதான் இந்த லிங்கத்தை வெளியில் வைத்து பூசை செய்வார்கள்)வந்தோம். ராமேஸ்வரம் ராமனாதர் கோவில் என்பது ஒருவர் வாழ்நாளில் பார்க்க வேன்டிய ஒரு கோவில்.மிகப்பெரிய கோவில். பல சன்னதிகள். அழகிய வேலை பாட்டுடன் கூடிய ஒப்பற்ற‌ மன்டபங்கள்.கடலை நோக்கி அமைந்திருக்கும் இந்த கோவில் ஒரு அற்புதமான படைப்பு.
ராமேஸ்வரம் ஒரு தீவு .அதன் முக்கிய ஜீவாதாரத்தொழிலே மீன்பிடிக்கும் மீனவர் தொழில்தான். கடல்தான் இவர்களுக்கு கடவுள்,தாய்.தந்தை எல்லாம்.எங்கு பார்த்தாலும் மீன் வாடை அடித்துக்கொன்டேதான் இருக்கும். கடற்காற்றும், மீன்வாடையும் இங்குள்ளவர்களுக்கு, இல்லாமலிருக்க முடியாது என்பது போல மூச்சோடு கலந்த ஒரு விஷயம்.கிளிஞச‌ல்களில் வேலைபாடுகள் செய்து பல விதமான பொருட்களைச் செய்து விற்பது பலருடைய தொழில்.சுற்றுலாப்பயணிகள் இந்த ஊரின் மிகப்பெரிய வருமான
சாதனம்.மறுநாள் எழுந்து ஜீப்பில் தனுஷ்கோடிக்குப் பயணமானோம்.ஜீப் கடல் மணலில் ஓடியது.
ஜீப்பில் போகும்போது நாலு புரமும் எங்கு நோக்கினும் மண‌ல்..மணல்..அதைப்போல பிரம்மான்டமான மணல் வெளியை நான் சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன். இடையிடையெ ஆங்காங்கு சிறிய கூடரம் போன்ற அமைப்புகள். மீனவர்களின் இருப்பிடங்கள் என்று கூட வந்தவர் சொன்னார். அங்கு எங்கள் மொபைல் வேலை செய்ய வில்லை,டவர் இல்லாத காரணத்தால்.மேலே இந்திய‌ ராணுவ கடற்படை விமானங்கள் பறந்த வண்ணமிருந்தன. இடையிடையே சிலர் கையில் குழந்தையுடனும், மூட்டை முடிச்சுக்களுடனும் வந்து அந்த அத்வானத்தில் நின்று கொன்டிருப்பதையும், ந‌‌டந்து வருவதையும் பார்த்தோம்.அவர்கள்தான் இலங்கைத் தமிழர்கள் என்றும்,திருட்டுப் படகில் இரவில் கிளம்பி, இலங்கையிலிருந்து வந்து இறங்கி அந்த கடல் மணலில் நடந்து வந்து கொன்டிருக்கிறார்கள், என்றும் எங்களுடன் வந்தவர் கூறினார். எங்களுக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது அவர்களைப் பார்க்க.
ஆனால் சிறிது நேரத்திலேயே அங்கு ஒரு ராணுவ விமானம் ப‌றந்தது. எங்களுடன் கூட வந்தவர் ராமெஸ்வரத்தைச்சேர்ந்தவர்.அவருக்கு இது ஒரு புதுமையானதாகவே இல்லை.
இன்னும் சற்று நேரத்தில் ராணுவம் வந்து இந்த அகதிகளை அழைத்துச் சென்று விடும் என்று கூறினார்.எங்களுக்கு இந்த சூழ்நிலை மிகவும் வினோதமாக இருந்தது.
சற்று தூரம் சென்றவுடன் கோதண்ட ராமர் கோவில் .வந்தது.அங்குதான் விபிடணனுக்கு ராமர் சரணகதி தந்ததாகவும்,இலங்கையிலிருந்து திரும்பி வரும்போது அவருக்கு பட்டபிஷேகமும் அங்குதான் நடத்தினதாகவும் கூறினார்கள்.
‌அங்கிருந்து கிளம்பி திரும்ப ஜீப்பில் பயணித்தோம். 15 நிமிடத்தில் தனுஷ்கோடியை அடைந்தோம்.வெட்ட வெளி, நான்கு புற‌மும் கடல்,கடல் காற்று,கடல் நீர் கண்ணுக்கெட்டிய தூரம் வரை,உதித்து வரும் இளம் சூரியஒளி,திரும்பிப்பார்த்தால் நிலம்கற்பனை பண்ண முடியாத ஒரு சுழல். ஐம்பெரும் சக்திகளும் மட்டும் சாட்சியாக நானும் என் கணவரும் கை பிடித்தபடி கடலில் நீராடினோம். கடல் அலைகள் எங்களை நீராட்டி மேலும் மேலும் துய்மை படுத்துவதாக உணர்ந்தோம்.அந்த அனுபவத்தை யாரும் சொல்லால் விளக்க முடியாது.கடலுக்கும் பூசை செய்து ,பிறகு மணலினாலேயே லிங்கம் பிடித்து வைத்து கையில் எடுத்துப் போயிருந்த பூசைப்பொருட்களை வைத்து அந்த லிங்கத்துக்கு பூசை செய்தோம்.
ராமாயணத்தை விரும்பிப்படிக்கும் எங்கள் பேரக்குழந்தைகள் இல்லையே என்று மிகவும் நினைத்துகொன்டோம்.சில நிமிடங்கள் எங்களை மறக்கச் செய்தது அந்த சூழ்நிலை.
ராமர் இருந்தாரா? அது கதையா என்ற சந்தேகங்கள் சற்றும் எழவில்லை. ராமர் இங்குதான் நின்றார் ,இங்குதான் நின்று கடலைப்பார்த்து இலங்கைக்குப்போக திட்டமிட்டார் என்று எண்ணுபோது அந்த மக காவியம் கண்முன் ஒருமுறை நிகழ்வது போல் இருந்தது. இங்குதான் ராமரும் சீதையும் இலங்கையிலிருந்து திரும்பி வரும்போது சிவனை வழி பட்டர்களாம்.
பின் நாங்கள் மற்றும் சில இடங்களுக்குச்சென்று விட்டு சென்னை திரும்பி வெகு நாட்களுக்குப் பின்னும் மனதை விட்டு அகலாமல் நேற்று நடந்தது போல் இருக்கிறது அந்த ராமேஸ்வரம் ,தனுஷ்கோடி பயணம்.

No comments: